‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம்

வ.உ.சி. வாழ்க்கைக் குறிப்புகள்

1872 – 1900
  • 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் வியாழக்கிழமை, வ.உ.சி. ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.
  • பெரிய பெரிய மரங்களில் ஏறி மரக்குரங்காடுதல், கவண் கொண்டு நெடுந்தொலைவிலிருக்கும் பொருள்கள்மேற் குறிவைத்துக் கல்லெறிதல், தலைகீழ் நடத்தல், குத்துச் சண்டை முதலியன இவர் ஆடிய விளையாடல்கள். சலால்கான் என்பவரிடம் சிலம்பம் பயின்றுள்ளார்.
  • திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரின் பெயர் – வீரப்பெருமாள் அண்ணாவியார் (பள்ளிக்கூட ஆசிரியர் அண்ணாவியர் என்று அழைக்கப்பெறுவர்).
  • ஆத்திசூடி, உலகநீதி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நீதிவெண்பா, மூதுரை, போன்ற நீதி நூல்களையும் எண்சுவடி, குழிப்பெருக்கம் ஆகிய கணக்கு நூல்களையும் ஊன்றிப் படித்தார்.
  • இரவு நேரங்களில் கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். வ.உ.சி.
  • ஒட்டப்பிடார புதிய பள்ளியின் ஆசிரியர் – அறம்வளர்த்தநாதபிள்ளை.
  • வ.உ.சி. தனது பதினான்காம் வயதில் தூத்துக்குடியில் உள்ள ரோமன் கத்தோலிக்க புனித ஜேவியர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் கால்டுவெல் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார்.  கஸ்தூரி ஐயங்கார், அண்ணாத்துரை ஐயர் ஆகியோரிடம் ஆங்கிலத்தையும், தமிழறிஞர் சவரிராயபிள்ளையிடம் தமிழையும் கற்றுக்கொண்டார்.
  • 1893 – ல் திலகரின் அரசியல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.
  • திலகர் பற்றிய நினைவுக் குறிப்புகள் கொண்ட ஆங்கில நூலில் வ.உ.சி. “லோகமான்ய பாலகங்காதர திலகர் என்னுடைய அரசியல் குரு. 1893-இல் இருந்து அதாவது என்னுடைய இருபத்தொன்றாம் வயது முதற்கொண்டே அவருடைய அரசியல் பேச்சுகளையும் எழுத்துகளையும் கவனித்து வந்தேன்.  இவை இந்தியா என்னுடைய நாடு என்பதையும் பிரிட்டிஷார் நாட்டை அடிமைபடுத்திவிட்டனர் என்பதையும் நாடு அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்தின ”என்கிறார்.
  • 1894 – பிப்ரவரி-இல் வழக்கறிஞர் (பிளீடர்) தேர்வில் வென்று வழக்கறிஞர் ஆனார்.
  • சாமிநாத பிள்ளை, சண்முகம் பிள்ளை ஆசிரியர்களிடமும் பயின்றுள்ளார்.
  • 1895 – இல் திருச்சியில் சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார்.
  • வ.உ.சி. திருச்சியில் இருந்த போது கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் ஆகிய புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் பயிற்சி பெற்றார்.
  • 1895 – இல் வள்ளியம்மையை மணந்து கொண்டார். அவரது பட்டப்பெயர் மகராசி.
  • 1898 – இல் காங்கிரசுக்கு ஒட்டப்பிடாரத்தில் கிளையை அமைத்து அதற்குச் செயலாளராகவும் பொருளாளராகவும் செயல்பட்டார். 1898- டிசம்பரில் கூடவிருந்த காங்கிரசு மாநாட்டிற்கு பொருள் உதவி செய்கிற வேலையைச் செய்தார்.
  • காங்கிரஸ் மகாசபை 1898 டிசம்பர் 29, 30, 31 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.
  • சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தொல்காப்பிய உரை கேட்டார் முழுமையாக கேட்கவில்லை.
  • 1900 – இல் சுவாமி வள்ளிநாயகம் என்பவருடன் இணைந்து ‘விவேகபானு’ என்னும் இதழினைப் பிரசுரித்தார்.
  • 1900 – இல் ஒட்டப்பிடாரத்திலிருந்து தூத்துக்குடிக்குக் குடிபெயர்ந்தார் வ.உ.சி.
  • வ.உ.சி. வேதாந்தத்தில் மிக்க ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். வேதாந்தத்தை விளக்கும் “கைவல்யம்”, “விசார சாகரம்” எனும் இரு பெரும் தத்துவ நூல்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தவர்.  கைவல்யம் என்பது ‘கைவல்ய நவநீதம்’.
  • வ.உ.சி.-யின் வேதாந்த கல்விக்கு உற்ற துணைபுரிந்தவர் அவருடைய நண்பர் சுவாமி வள்ளிநாயகம்.
1901 – 1905
  • 1901-இல் வ.உ.சி. யின் மனைவி வள்ளியம்மை இறந்ததும் இரண்டாவது மனைவியாக மீனாட்சியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
  • 1902 ஏப்ரலில் விவேகபானுவின் ஆசிரியராக சுவாமி வள்ளிநாயகம் பொறுப்பேற்றார். இவர் வ.உ.சி.யின் நண்பர்.  சுவாமி வள்ளி நாயகத்திற்குப் பின் விவேகபானுவை மு.ரா. கந்தசாமிக் கவிராயர் நடத்தினார்.   விவேகபானுவின் வளர்ச்சிக்கு மாதந்தோறும் ரூபாய் பன்னிரண்டை நன்கொடையாக வழங்கினார் வ.உ.சி.
  • 1905-இல் மதுரைத் தமிழ் சங்கத்து உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • 12-05-1905-இல் பாண்டித்துரைத் தேவர் வ.உ.சி.க்கு எழுதிய கடித்த்தில் “தாங்கள் இச்சங்கத்தில் கல்வி அங்கத்தினருள் ஒருவராய் அமர்ந்து செந்தமிழ் பாஷா அபிவிர்த்திக்கு வேண்டுவனவற்றைப் புரிவதற்கு மனமுவந்து வரவிடுத்து சம்மதப் பத்திரிகையைக் கண்ணுற்று பெரு மகிழ்வு எய்தினேன். இவ்வாறு அன்பு கூர்ந்து முன் வந்து வாக்குதவிய தங்கட்கு அனேக வந்தனம் அளிக்கின்றோம்”.
  • 1905-ஆம் ஆண்டு மே மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற சைவ சித்தாந்த சொற்பொழிவின் போது மறைமலையடிகள் வ.உ.சிதம்பரனார் வீட்டிற்கு விருந்தினராய்ச் சென்றுள்ளார்.
  • 1904-05 ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் பங்கேற்று பணியாற்றினார். அதில் சைவசித்தாந்தம் தொடர்பாக எட்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
1906-1924

1906

  • வ.உ.சி.யின் முதல் அரசியல் கட்டுரை ‘சுதேசாபிமானம்’ என்ற தலைப்பில் மதுரை விவேகபானுவில் 1906 பிப்ரவரியில் வெளிவந்தது.
  • சுவாமி அபேதானந்தர் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு 1906, ஜுன் 29 ஆம் தேதி வந்தடைந்தார். அவரை வ.உ.சி.யும், தூத்துக்குடி பிரமுகர்களும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
  • 1906, அக்டோபர் 16-இல் தூத்துக்குடியில் ‘சுதேசி கப்பல் கம்பெனி’ பதிவு செய்யப்பட்டது.
  • இந்தியா பத்திரிகை அலுவலகத்தில் முதன்முறையாக வ.உ.சி. பாரதியாரைச் சந்திக்கிறார்.
  • சென்னையில் பாரதியாருடன் சேர்ந்து ’சென்னை மக்கள் சங்கம்’ அமைக்கிறார்.
  • 1906 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற காங்கிரசு கூட்டத்தில் வ.உ.சி. கலந்து கொள்கிறார்.
  • பம்பாய்க்கு கப்பல் வாங்கச் செல்கிறார்.
  • கப்பல் வாங்க பம்பாய் சென்ற போது வ.உ.சி.யின் மகன் உடல்நலக் குறைவோடும் மனைவி பிரசவிக்கும் நிலையிலும் இருந்துள்ளனர். மனைவியும் நண்பர்களும் வ.உ.சி.யை ஒரு முறை வந்து செல்லுமாறு கூறியபோது “மனைவியையும் புத்திரனையும் கடவுள் கையில் ஒப்புவித்திருக்கிறேன்.  அவர் எது எங்களுக்கு நன்மை என்பதை என்னைவிட நன்குணர்வார்” என்றார்.

1907

  • சுதேசி கப்பல் கம்பெனிக்காக ‘எஸ்.எஸ். காலியோ, லாவோ’ என்னும் இரு கப்பல்களை, 1907 ஆம் ஆண்டு மே மாதம் பம்பாயிலிருந்து வாங்கி வந்தார்.
  • வ.உ.சி. இரண்டு கப்பல்கள் வாங்கி வந்தது பற்றி பாரதியார் இந்தியா இதழில் “வெகு காலம் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்த பெண் ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்ற ஆனந்தம் போன்றது” என்கிறார்.
  • 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சி. பங்கேற்றார். இம்மாநாட்டில் காங்கிரஸானது மிதவாதம், தீவிரவாதம் என இரு பிரிவானது.  வ.உ.சி. தீவிரவாத காங்கிரஸ் பிரிவில் திலகருடன் இணைந்து செயல்பட்டார்.
  • சூரத் மாநாட்டிற்குப் பின்னர் திலகர், அரவிந்தகோஷ், சிதம்பரனார் மூவரும் சேர்ந்து காங்கிரசுக்குள்ளேயே ‘தேசிய வாதிகள் மகாநாடு’ என்னும் பெயரில் தனிக்கட்சி ஒன்றினை அமைத்தனர்.
  • வ.உ.சி.யும் பாரதியும் ஒன்றாக இணைந்து பயணித்தனர்.

 

1908

  • தூத்துக்குடியில் 3-2-1908 அன்று வ.உ.சி. சுப்ரமணிய சிவாவை சந்திக்கிறார்.
  • 1908, பிப்ரவரி 27 ஆம் நாள் தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டம் தொடங்கியது.
  • 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு, வாரவிடுமுறை போன்ற கோரிக்கைகளைக் கொண்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டமானது 7-3-1908 அன்று முடிவுக்கு வந்தது.  இதில் அரை மடங்கு ஊதிய உயர்வு, ஞாயிறு விடுமுறை, உணவு இடைவேளை, அவசர காலத்தில் ஊதியமின்றி விடுப்பு எடுத்தல் போன்ற கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டன.
  • 1908-இல் திருநெல்வேலியில் தேசாபிமான சங்கத்தை வ.உ.சி. தோற்றுவித்தார்.
  • 9-3-1908, அன்று திருநெல்வேலி கொக்குறை குளத்தில், வ.உ.சி.க்கு அனுப்பப்பட்ட ஆணைப்படி கலெக்டர் விஞ்ச் முன் ஆஜரானார். விபின் சந்திரபாலின் விடுதலை நாள் கொண்டாடுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் வ.உ.சி. பங்கேற்க தடைபெற்றபோதும் தண் பொருநை ஆற்றின் நடுவே கூடிய மாபெருங் கூட்டத்தில் வ.உ.சி. பேசினார்.
  • 1908 மார்ச் 9 ஆம் நாள் விபின் சந்திரபால் விடுதலையை சுயராச்சிய நாளாகக் கொண்டாட சுதேச இயக்கத் தலைவர்கள் முடிவு செய்தனர். ஆங்கிலேய அரசின் எதிர்ப்புக்கும் தடைக்கும் மத்தியில் மார்ச் 10-ஆம் நாள் காலை விழாவைக் கொண்டாடினர்.
  • 12-3-1908 அன்று விஞ்ச், வழக்கு ஆராய்ந்து முடியும் வரை வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் மூவரையும் குலமாணிக்கபுரம் சிறைக்கு அனுப்பினார். (மாணிக்கம் என்பவர் உருவாக்கிய ஊர் என்பதால் மாணிக்கபுரம் என்ற பெயர் பெற்றது. அவ்வூரில் சிறைச்சாலையும் கொலை செய்யும் தூக்குமேடையும் இருந்ததால் கொலை மாணிக்கபுரம் ஆனது.  பின்னர் குலமாணிக்கபுரம் என்றாயிற்று).
  • வ.உ.சி.யின் மீது கூறப்பட்ட முதற்குற்றமாக பின்வரும் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அதில் தூத்துக்குடியில் இவர் செய்த பெருங்கிளர்ச்சியே முதற்காரணம்.  திருநெல்வேலியில் 1906-இல் நடைபெற்ற 22-வது மாகாண அரசியல் மாநாட்டிலும், நெல்லையப்பர் கோயில் முன்பும், பாளையங்கோட்டையிலும், கவிவாணருடனே பலபல இடங்களில் மதுரையிலும் சூரத் மாநாட்டிலும், சென்னை கடற்கரையிலும், கூடலூர், தஞ்சை முதலிய நகரங்களிலும் சென்று பேசியதும், நாவாய்ச் சங்கத்தை நாட்டியதும், திலகர் முதலிய மாபெருந்தலைவர்களுடன் நெருங்கிய நட்புடன் சென்னை மாகாணத் தீவிரவாதிகள் தலைவரானதும் வெள்ளையருடைய நெஞ்சினைக் கலங்கச் செய்தன.  இனி அவ்வாறு நடப்பதில்லை என்று பிணை தரும்படி வெள்ளை அரசாங்கம் வழக்குத் தொடர்ந்தது.
  • பேட்டு என்பவர் எழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாறு நூலில் திருநெல்வேலி கலகம் குறித்து விரிவாக கூறியுள்ளதை இ. மு. சுப்பிரமணியபிள்ளை பதிவு செய்துள்ளார். அதில் ஒரு கூட்டம் வலுவந்தமாகக் கடைகளை அடைக்கச் செய்தது.  திருநெல்வேலி பாலம் என்று சொல்லப் பெறும் வீரராகவபுரத்தில் பள்ளிப் பிள்ளைகளும் வாலிபர்களும் ஆக ஒரு கூட்டம் கூடிக் கடைகளை அடைக்கும்படிச் செய்து திருநெல்வேலி நகரை நோக்கிப் புறப்பட்டது.  வழியில் இரண்டு ஐரோப்பியரை அடித்ததோடு சர்ச்சுமிஷன் கல்லூரியிலும் சிறிது குழப்பத்தை விளைவித்து,  நகரத்திலிருந்த கடைகளை அடைக்கச் செய்து தெரு விளக்குகளை எல்லாம் உடைத்து,  பொருள் நீதி மன்றத்துள் (District Munsif’s Court) நுழைந்து நீதிபதியை அச்சுறுத்தி மன்றத்தை அடைக்கும்படிச் செய்து, காவலர் நிலையத்தைக் கொள்ளையிட்டு எரித்து, நகராட்சி நிலையத்தையும் அதன்பொருட் சேமிப்பு அறையையும் கொளுத்தி, அஞ்சல் நிலையத்தின் ஒரு பகுதியை எரித்து, மருந்துச் சாலையில் நுழைந்து தட்டுமுட்டு சாமான்களை உடைத்துப் படாதபாட்டெல்லாம் படுத்திவிட்டது அக்கூட்டம்.  கலெக்டரும் காவலர் தலைவரும் காவற்படையுடன் வந்தபோது ஊரினுள் நுழையாதபடி தாக்கப்பட்டார்கள்.  கலெக்டரே சுட்டுக் கூட்டத்தைக் கலைத்தார்.  ஐம்பத்து மூவர் பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்.

அதே சமயத்தில் தூத்துக்குடியிலும் ஒரு கலகம் நடைபெற்றது.  ஆசு என்ற உதவி கலெக்டரும் காவலரும் தாக்கப்பட்டார்கள்.  சிலர் சுடப்பட்டார்கள்.  முப்பத்திரண்டுபேர் தண்டிக்கப்பட்டார்கள்.

மறுநாள் தச்சநல்லூரில் சிறு கலகம் நடந்தது.  அதில் தெரு விளக்குகள் உடைந்தன.  பல ஊர்ப் பொதுப் பொருள்கள் எரிக்கப்பட்டன.  இதன் பயனாக மூன்று இடங்களிலும் ஊர் செலவிற் காவலர் படை ஆறு மாதங்களுக்கு அமர்த்தப்பட்டது.

  • 23-3-1908 அன்று “பிணையிற் சிதம்பரனாரை விடுக” என்ற ஆணை உயர்நீதி மன்றம் மூலம் கிடைத்தது. அதன் பேரில் 24-3-1908 விடுதலை செய்யப்பெற்று, அரச நிந்தனைக் குற்றத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • பின்ஹே தனது தீர்ப்பில் தீர்ப்பில் “இந்தியர் அடிமைகள் : அதனால் அவர்களுக்கு இங்ஙனம் பொது மக்களைக் கூட்டிப் பேசும் உரிமையில்லை” எனத் தமது தீர்ப்பில் எடுத்துரைத்தார்.
  • 7-7-1908 சுப்பிரமணிய சிவாவுக்கு பத்து ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கினார். அதில் ஒரு ஆயுள் தண்டனை சிவாவை ஆதரித்ததற்கும் மற்றொன்று அரசநிந்தனை குற்றத்திற்கும் வழங்கப்பட்டது.
  • வ.உ.சி. தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து “என்னே இப்பின்னி நீதி! இவன் அறிவுதான் என்னே? இந்த ஆயுள் அளவும் தண்டனை விதித்தான்: சரி. இனி, வரும் ஆயுளுக்கும் இவனா தலைவன்? என்னே இவன் அறியாமை !” என்று நகைத்தார்.
  • இந்த தீர்ப்பு குறித்து அன்றைய இந்தியாவின் மந்திரியாக இருந்த மார்லி பிரபு ”நாம் கொடுமை செய்தால் நமது ஆட்சி அழியும்: நமது ஆட்சியை வலுப்பெறச் செய்வது நீதி முறையே தான்” என்று மிண்டோ பிரபுக்கு கடிதம் எழுதினார்.
  • 13-10-1908 அன்று இந்த வழக்கிற்கு தலைமை நீதிபதி ஆர்னால்டு இரைட்டு, நீதிபதி மன்றோ ஆகிய இருவரும் வழங்கிய தீர்ப்பில் சிவாவை ஆதரித்த குற்றத்திற்கு ஆறு ஆண்டுகள் தீவாந்தரமும் அரச நிந்தனை குற்றத்திற்கு நான்காண்டு தீவாந்தரமும் தண்டனையாக வழங்கினர். இரண்டு தண்டனையும் ஒரே காலத்தில் நடைபெற வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.  இதனால் வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையானது ஆறு ஆண்டுகளாகக் குறைந்தது.
  • மேல்நீதிமன்றமானது ஆறு ஆண்டுகள் தீவாந்தரத் தண்டனையை ஆறு ஆண்டுகால கடுங்காவல் தண்டனையாக மாற்றினர்.
  • 1912 டிசம்பர் 24 அன்று சிறையிலிருந்து விடுதலை பெற்றார் வ.உ.சி.
  • 9-7-1908 வ.உ.சி. திருநெல்வேலியிலிருந்து கோயமுத்தூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது வ.உ.சி. “எப்படியாவது விரைவில் மீளுவேன்.  நமது கடைபிடிகளை நெகிழவிடாதீர்” என்று வீரர் யாவருக்கும் ஆறுதல் கூறிச் சென்றார்.
  • வ.உ.சி.க்கு முதலில் சணல் கிழிக்கும் இயந்திரத்தைச் சுற்றும் பணி கிடைத்தது. அதனால் அவர் கையில் இரத்தம் கசிந்தது. இதனைக் கண்ட சிறை அதிகாரி மிஞ்சேல் மாட்டுக்குப் பதிலாக செக்கினை இழுக்கும்படிக் கட்டளையிட்டான்.
  • சி.கே. சுப்பிரமணிய முதலியார் கோவை சிறையில் வ.உ.சி.க்குத் தேவையான உதவிகளைச் செய்தார்.
  • மிஞ்சேல் என்னும் அதிகாரி சிறையிலிருந்தவர்களால் தாக்கப்பட்டார். இது குறித்த வழக்கில் வ.உ.சி. சாட்சியம் சொல்லும்போது “சிறையதிகாரி படம்பிடிப்பார், குருவி சுடுவார், இப்போது கூடப் போய்ப் பார்க்கலாம், அங்கே குருவியே சுட்டுக் கொண்டுதான் நிற்பார்.  அவர் சிறையில் நடப்பவைகளை நன்றாகக் கவனிப்பதில்லை, கவனிக்க நேரமும் இல்லை.  அதனால் மிஞ்சேல் வைத்ததுதான் சட்டம்.  சோறோ பாதி மணல், மற்ற பாதி மண்.  குழம்போ பழுத்த இலையும் புழுத்த காயும் வெந்நீரிற் குழப்பியதே.  மிஞ்சேல் சிறைப்பட்டாரைக் கொடுமையாகவே நடத்தினான்.  கம்பால் மொழிகளில் அடிப்பான்:  நெஞ்சு புண்ணாகும்படி பேசுவான்” என்று கூறினார்.  அப்போது அரசாங்க வழக்கறிஞர் “சிறை உமக்கு எப்படி இருக்கிறது?” என்று கேட்க “நீ சில நாள் சிறையிற் சென்று எழுந்தருளியிருந்தால் அந்நலமெல்லாம் நன்றாய் அறிவாய்” என மறுமொழி கூறினார் வ.உ.சி..
  • சி.கே.சுப்பிரமணிய முதலியாரின் உதவியை நினைவு கூறும் வகையிலே தனது மூன்றாவது மகனுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டினார்.
  • மிஞ்சேல் நிகழ்வுக்குப்பின்னர் கோவை சிறை அதிகாரியிடம் சிறைகளின் மகாணத் தலைமை அதிகாரி “இவர்பால் எல்லா மரியாதையோடும் நடந்து வாருங்கள். இவருக்குத் தொல்லைக் கொடுப்பீரானால் நமக்கும் எல்லாத் தொல்லைகளும் விளையும்” என்று கூறினார்.
  • கோவை சிறையில் இரண்டரை ஆண்டுகள் கழிந்தபின் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
  • வ.உ.சி. சிறையிலிருந்த காலத்தில் அவரது குடும்பத்தினர் கோவை உப்பிலிப்பாளையத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
  • திருப்போரூரில் வ.உ.சி. சில காலம் தங்கினார். அவ்வூரின் திருக்கோயில் அம்மையின் பெயரான மரகதவல்லி என்னும் பெயரினை தனது மகளுக்குச் சூட்டினார் வ.உ.சி.
  • வ.உ.சி. தனது தீர்ப்பு குறித்து “அஞ்சாதீர்கள், ஐக்கோர்ட்டில் அடித்துத் தள்ளிவிட்டு வந்து விடுகிறேன்” என்று நண்பர்களுக்கு ஆறுதல் கூறினார்.
  • 9-7-1908 முதல் 30-11-1910 வரை கோவை சிறையிலும் 1-12-1910 முதல் 24-12-1912 வரை கண்ணனூர் சிறையிலும் வ.உ.சி. சிறை தண்டனையை அனுபவித்தார்.
  • வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு “ஸ்ரீமான் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை ஜிவிய சரித்திரச் சுருக்கம்” 1908-லே நாற்பத்தெட்டு பக்கங்களைக் கொண்ட சிறுநூலாக வெளிவந்தது. இந்நூலை வெளியிட்டவர் எம். கிருஷ்ணசாமி ஐயர்.  நூலாசிரியரின் பெயர் கூறாமல் தொகுத்தவர் என்று மட்டுமே நூலில் கூறப்பட்டுள்ளது.  தொகுத்தவரின் பெயர் எஸ். வேதமூர்த்தி முதலியார்.  இவர் வ.உ.சி. யின் நெருங்கிய நண்பர்.  இவர் ‘சர்வஜன மித்திரன்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.  இந்த நூல் வ.உ.சி.யை ஒரு வீரராகப் பாவித்து 1908-லே உருவாக்கப்பட்டுள்ளது.

 1911

  • 17-6-1911 அன்று திருநெல்வேலி மாவட்டக் கலெக்டராக இருந்த ஆசு, வாஞ்சிநாதனால் மணியாச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1912

  • 1912, டிசம்பர் 24 அன்று கோவை கண்ணனூர் சிறையிலிருந்து வ.உ.சி. விடுதலையானார்.

 1913

  • பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையிடம் இளம்பூரணர் உரைப்பிரதி இருப்பதை அறிந்து, அவருக்கு 1913-இல் வ.உ.சி. கடிதம் எழுதினார்.  இதிலிருந்து இருவரும் இலக்கியத் தோழர்களானார்கள்.

1914

  • 1-4-1914-இல் ‘அகமே புறம்’ என்ற நூல் அச்சாகி வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பு 1916-இல் வெளிவந்தது.  இவ்விரண்டாம் பதிப்பிற்கு பொருளுதவி செய்தவர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார்.

1915

  • வ.உ.சி. யின் முதல் மனைவியைப் பற்றிய ‘வள்ளியம்மை சரித்திரம்’ என்னும் நூலை சி. முத்துசுவாமிப் பிள்ளை இயற்றியுள்ளார். இந்நூலுக்கு வ.உ.சி. அரும்பதவுரை எழுதியுள்ளார்.
  • 19-8-1915- இல் வ.உ.சி. மயிலாப்பூரில் வாழ்ந்த போது ‘மெய்யறிவு’ நூல் அச்சிடப்பட்டது.

1916

  • 1916 ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம்பிள்ளையால் ‘வலிமைக்கு மார்க்கம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டுள்ளது. விலை அணா எட்டு.

1917

  • அறப்பால் மணக்குடவர் உரை வ.உ.சி. பிரம்பூரில் இருந்தபோது 1917-இல் வெளிவந்தது. இதனை வெளியிட தனது மாணாக்கர் சகசானந்தரை துணையாகக் கொண்டுள்ளார்.
  • மணக்குடவர் உரைப்பதிப்பு நூலுக்குப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் தி. செல்வக்கேசவராய முதலியாரும், கிருத்தவக் கல்லூரிப் பேராசிரியர் த. கனக சுந்தரம்பிள்ளையும் உதவிபுரிந்துள்ளனர்.
  • தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்கள் பொருளுதவி புரிந்துள்ளனர்.
  • பொய்கையார் எழுதிய இன்னிலையை வ.உ.சி. பிரம்பூரில் இருந்தபோது 24-7-1917-இல் வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு முகவுரையும், வ.உ.சி. குறித்த ஆராய்ச்சியுரையும் தில்லையாடி த. வேதியப்பிள்ளையால் எழுதப்பட்டுள்ளது.

1919

  • 17-2-1919 அன்று வ.உ.சி, திரு.வி.க. இன்னும் சிலரும் சென்னை பிரம்பூரில் திலகரை வரவேற்றனர். அப்போது வ.உ.சி., திலகரிடம் “இது தொழிலாளர் காலம்; தாங்கள் செல்வர் மாடியில் தங்கினால் ஏழை மக்கள் தங்களைக் காண இயலாது வருந்துவார்கள்.  ஆதலால் தாங்கள் எங்களில் ஒருவர் குடிலில் தங்குவதற்கு உளங் கொள்ளல் வேண்டும்” என்று பெருந்தலைவரிடம் விண்ணப்பஞ் செய்தார்.  “சிதம்பரம் எனக்கா விண்ணப்பம் ?எனக்கு எந்தக் குடிசையாயிருந்தா லென்ன” என்று பதில் பிறந்தது.  எங்கட்கு ஆனந்தம் பொங்கியது.
  • ஈரோட்டில் சென்னை மாகாணச் சங்க இரண்டாம் ஆண்டு மகாநாடு 11, 12-10-1919-இல் நடைபெற்றது. இதில் வ.உ.சி. பங்கேற்றார்.

1920

  • 11-1-1920 சென்னை கடற்கரையில் ஒரு கூட்டங் கூடியது. அது பற்றிய திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்பினில் “நண்பர் சிதம்பரம்பிள்ளை பேசினார்.  அவர் வாய் பெஸண்ட் அம்மையாரையும் என்னையும் வாழ்த்தியது; எப்படி வாழ்த்தியது? வசைமலர்களால் வாழ்த்தியது” என்கிறார் திரு.வி.க.
  • 1920, கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வ.உ.சி. கலந்து கொண்டார். தனது கொள்கை வேறுபாடு காரணமாக காங்கிரசிலிருந்து விலகினார்.
  • 14-4-1920, நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் வ.உ.சி. “அஞ்சல் துறை, தந்தித்துறை, காவல்துறை, இரயில்வேக்கள் ஆகிய இந்நான்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நாற்சுவர்களாகும். இவற்றில் ஏதாவதொரு சுவர் இடிந்து விழுந்தாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக வீழ்ந்துவிடும்.  நீங்கள் அரசாங்கத்தின் அடித்தளத்தைப் போன்றவர்கள்” என்று கூறினார்.
  • 24-6-1920 திருநெல்வேலி மாநில மாநாட்டில் வ.உ.சி. “மக்கள் கோருகிறபடி அரசாங்கம் செயல்படாவிட்டால், இந்த சங்கங்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்ட வேண்டும். இந்தச் சங்கங்கள் மட்டும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், நீங்கள் நினைத்த மாத்திரத்திலே சுயராஜ்ஜியத்தைப் பெறுவீர்கள்” என்று பேசினார்.

1921

  • சென்னையில் 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் சென்னை விவசாய கைத்தொழில் சங்கம் லிமிடெட்டை நிறுவினார்.
  • நாளிதழில் வெளிவந்த செய்திகளின் வழியே பாரதியின் மறைவை வ.உ.சி. அறிந்தார்.

 1924

  • 1924-இல் வழக்கறிஞராகக் கோவிற்பட்டிக்கு வருகின்றார்.
  • இ.மு.சுப்பிரமணியபிள்ளை கோவிற்பட்டியில் உயர்பள்ளி ஆசிரியர் சங்க அமைச்சராக இருந்துள்ளார். கோவிற்பட்டியில் வ.உ.சி.க்கு பெரிதும் உதவியுள்ளார்.
1925-1930
  • 1-7-1927-இல் கோவையில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மாகாண மாநாட்டில் பங்கேற்றார் வ.உ.சி.
  • 1927-இல் மதுரை மேல மாசி வீதியில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்த மாநாட்டில் வ.உ.சி. பேசினார். அதில் உணவகங்களில் சாதி வேறுபாடு காட்டி வேறு வேறு இடங்களில் படைப்பது பெருந்தவறு என்று பேசினார்.
  • 1927, நவம்பரில் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஜில்லா மாநாட்டில், வ.உ.சி. ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற தலைப்பில் தலைமையுரை நிகழ்த்தினார். இது வ.உ.சி.யைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய உரையாக அமைகிறது.
  • 1928 துவக்கத்தில் செட்டிநாட்டில் வ.உ.சி. சில சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை 1928, பிப்ரவரி சிவநேசன் பத்திரிகையில் பொ. முத்தையாபிள்ளை வ.உ.சி.க்கு கூறிய பதிவிலிருந்து அறிய முடிகிறது.
  • 1930- ஜுலை 9-இல் மாசிலாமணிப்பிள்ளை என்பவருக்கு வ.உ.சி. கோவில்பட்டியிலிருந்து கடிதம் எழுதினார். அதில் “தேசாபிமானிகள் பேரில் கொண்டு வரப்படும் ஒவ்வொரு கேசிலும், மிக மிக அற்பக் கேசிலும் எதிர்வாதம் செய்து கவர்ண்மெண்டாரும் கோர்ட்டாரும் போலிசாரும் தேசாபிமானிகள் சம்பந்தமாகச் செய்யும் செயல்களை எல்லாம் உலகறியச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய சித்தாந்தம்” என்கிறார்.
  • 1930, ஜுலையில் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளி வந்தது.
  • 1930 சென்னைப் பச்சையப்பன் மண்டபத்தில் வரதராசுலு நாயுடு தலைமையில் தொழிலாளர் கூட்டு மாநாடு நடைபெற்றது. அதில் நடந்த தலைவர் பதவி தேர்தலுக்கு வ.உ.சி.யின் பெயரை வரதராசுலு நாயுடு முன்மொழிந்தார்.  இத்தேர்தலில் வ.உ.சி.க்கு வெற்றி கிட்டவில்லை.
1931–1935
  • 1932, மார்ச் மாதம் கோயிற்பட்டியிலிருந்து புறப்பட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு வ.உ.சி. குடும்பத்தோடு வந்துவிட்டார்.
  • 1932 வ.உ.சி. அறுபதாண்டு நிறைவுக்கு, நிதி திரட்டும் முயற்சி நடந்த போதிலும் உரிய நிதி சேராததால், அம்முயற்சி வெற்றிபெறவில்லை.
  • தொல்காப்பிய பொருளதிகாரத்தின் களவியல், கற்பியல், பொருளியல் அதிகாரங்களை 1933 ஆம் ஆண்டும், 1935-ஆம் ஆண்டில் முதல் இரண்டு அதிகாரங்களைத் தவிர்த்து மற்ற ஏழு அதிகாரங்களையும் பதிப்பித்துள்ளார்.
  • வ.உ.சி. திருக்குறள் முழுமைக்கும் எழுதிய உரையை பல பேரறிஞர் முன்னிலையில் திருச்செந்தூர் முருகப்பெருமான் முன்பு 1934-இல் அரங்கேற்றினார்.
  • திருக்குறள் மூலபாடம் பல உரையாசிரியரால் பலவிதமாகக் கொள்ளப்பட்டிருக்கிறமையால் அறிவுக்குப் பொருந்தாத இடங்களைத் திருத்தலாம் என்பது வ.உ.சி. கொள்கை. இதனைப் புலவர் பலர் எதிர்த்தனர்.  வ.உ.சி. அவர்கள் எதிர்ப்பினைப் பொருட்படுத்தவில்லை.
  • 1934, ஜனவரி காந்திஜி தூத்துக்குடி வருவதையொட்டி 1933, டிசம்பர் 10 காந்திஜியை வரவேற்பதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வ.உ.சி. தலைமை வகித்துப் பேசியுள்ளார்.
  • இலங்கையிலிருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் வ.உ.சி. “14, மே 1933 முதல் 14, அக்டோபர் 1934 வரை சுமார் எழுபது வாரங்கள் ”பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷி” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார்.
  • 1934 ஜுலையில் ‘சாந்திக்கு மார்க்கம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை வ.உ.சி. வெளியிட்டார்.
  • 1935, பிப்ரவரியில் வ.உ.சி. வெளியிட்ட திருக்குறள் அறத்துப்பால் உரை நூலில் “காகிதம், மை, கட்டுநூல் முதலியன எல்லாம் சுதேசியம்” என்பதைத் தடித்த எழுத்துக்களில் அச்சிட்டு வெளியிட்டார்.
  • 1934-35 ஆண்டுகளில் சிவஞானபோதத்திற்கு உரை எழுதி ‘தினமணி’யில் வெளியிட்டார் வ.உ.சி.
  • திருக்குறள் அறப்பால் 9-2-1935 அன்று அச்சாகி வந்தது. அதனைப் பிழைதிருத்தம் பார்க்கும்படி இ.மு.சுப்பிரமணிய பிள்ளைக்கு அனுப்பி வைத்தார்.
  • சிவஞான போதத்திற்கான சிறிய உரையினை 1935-இல் வ.உ.சி. எழுதி வெளியிட்டார்.
1936
  • 15-1-1936-இல் தொல்காப்பியத்தின் பொருளதிகார கடைசி நான்கு இயல்களையும் பதிப்பிப்பதற்கான பதிப்புரை எழுதியுள்ளார்.
  • வ.உ.சி. யின் திருக்குறள் உரையில் பிழைதிருத்தம் மேற்கொண்டதற்காக இ.மு. சுப்பிரமணிய பிள்ளைக்கு வ.உ.சி. 5-4-1936- இல் பாராட்டுக் கடிதத்தை எழுதியுள்ளார்.
  • செப்டம்பர் 1936, முதல் வ.உ.சி. படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார்.
  • 17-11-1936 தினமணி தலையங்கத்தில் ” ஸ்ரீ வ.உ. சிதம்பரம்பிள்ளை தேகநிலை தண்ணீர்கூட இறங்கவில்லை, பாரதி கீதங்களை கேட்க ஆவல்” என்று கூறப்பட்டுள்ளது.
  • 17-01-1936-இல் தினமணியில் வெளியான “உலகமும் கடவுளும்” என்பதே வ.உ.சி. யின் கடைசி ஆன்மீகக் கட்டுரை.
  • 18-11-1936 அன்று வ.உ.சி. இயற்கை எய்தினார்.

குறிப்பு:

வ.உ.சி. குறித்த வாழ்க்கைக் குறிப்பானது அவரது நூல்கள், வ.உ.சி. பற்றிய நூல்கள், மலர்கள், நூற்றாண்டு மலர்கள், ஆய்வு நூல்கள், பத்திரிகை செய்திகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பெற்ற தரவுகள் காலமுறைப்படி தொகுத்துத் தரப்பட்டுள்ளன.