tva-logo

மெட்ராசு கூரியர் (Madras Courier) சென்னை
மாகாணத்தில் வெளிவந்த முதல்இதழ்

தெற்காசியாவின் முதல் இதழான ”பெங்கால் கெசட்” (சன. 29, 1780) கொல்கத்தாவிலிருந்து 1780 ஆம் ஆண்டு வெளிவந்தது. சேம்சு அகசுடசு கிக்கி (James Augustus Hickey) என்பவர் இதனை நிறுவியவர். இதனை தொடர்ந்து இந்தியன் கெசட்டு (நவ. 1780) கல்கத்தா கெசட்டு (பிப். 1784) பெங்கால் செர்னல் (பிப். 1784) ஒரியண்டல் மேகசின் அல்லது கல்கத்தா அமெசுமெண்ட் (ஏப். 1785) ஆகிய இதழ்களும் கொல்கத்தாவிலிருந்தே வெளிவந்தன.

அன்றைய சென்னை மாகாணத்திலிருந்து அக். 12, 1785 ஆம் ஆண்டு மெட்ராசு கூரியர் வெளிவந்தது. இது சென்னை மாகாணத்திலிருந்து வெளிவந்த முதல் இதழ்; இந்தியாவிலிருந்து வெளிவந்த ஆறாவது இதழ் ஆகும். “இரிச்சர்டு சான்சன்” என்பவர் இதன் நிறுவனர். இவ்விதழ் செய்தி இதழ் என்றாலும் நாள்தோறும் வெளிவரவில்லை; வாரம் ஒருமுறை என்னும் நிலையில் வார இதழாகத்தான் வெளிவந்தது.

நவ. 15, 1793 முதல் இந்த இதழ் “தி கூரியர்” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. நவ. 11, 1795 முதல் இது மீண்டும் “மெட்ராசு கூரியர்” என்று மாற்றப்பட்டது.

மெட்ராசு கூரியரின் கணிசமான இதழ்கள் இலண்டன் பிரிட்டிசு நூலகத்தில் இருந்தாலும் அத்தொகுப்பு இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. மேலும், அத்தொகுப்பில் விடுபட்ட இதழ்கள் இங்கு மின்னுருவடிவில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக. 1, 1793 முதல் மார்ச் 15, 1814 வரை மொத்தம் 523 “மெட்ராசு கூரியர்” இதழ்களைக் கண்டெடுத்து வெளியிடுவதில் தமிழ் இணையக் கல்விக்கழகம் பெருமிதம் கொள்கின்றது.

இதழ்களைக் காண இங்கே சொடுக்குக.