tva-logo

தேசிய சித்தமருத்துவ நாள் கொண்டாட்டம்
( நவ. 6, 2018 – திச. 26, 2018 )

சித்தமருத்துவ மாமணி
தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை
(19.9.1880 – 12.11.1953 )

சித்தமருத்துவப் பேரறிஞரான டி.வி.சாம்பவசிவம் பிள்ளை என்று அழைக்கப்பட்ட தஞ்சாவூர் வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை அவர்கள் சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமிழிசைக்கு ஆப்ரகாம் பண்டிதர் வாய்த்ததுபோல, தமிழ்மருத்துவமாகிய சித்த மருத்துவத்துக்கு வாராது வந்த மாமணி சாம்பசிவனார்.

இவர் எழுதிய Tamil - English Dictionary of Medicine, Chemistry, Botany and Allied Sciences : Based on Indian Medical Science என்னும் பெருநூல் சித்தமருத்துவத் துறைக்குக் கிடைத்த கலைக்களஞ்சியமாகும். ஐந்து தொகுதிகளையும், 6537 பக்கங்களையும் கொண்ட இந்நூலே தமிழ் மருத்துவத்தை உலகறிய செய்தது. 1916ஆம் ஆண்டு நூலின் முதல் தொகுதி வெளிவந்தது. அதன்பின் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இவ்விரண்டு தொகுதிகள் வெளிவந்தவுடன் இவைகளின் காப்புரிமைக்காக பிரிட்டிசு கவுன்சிலும் செர்மன் தூதரகமும் போட்டியிட்டன. பெருந்தொகையைக் கொடுக்க முன்வந்தும் சாம்பசிவனார் அயல்நாட்டினருக்குக் காப்புரிமையைத் தரமறுத்துவிட்டார்.

மூன்றாம் தொகுதி அச்சிடப்பட்டு வெளியிடும் முன்னர் 1953 இல் சாம்பசிவனார் மறைந்துவிட்டார். தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்றும், தன் ஓய்வூதியம் மூலமும் இப்பணியை இவர் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறந்தபின் இவரது உடைமைகள் அனைத்தும் அரசுடமையாயின. 1953ஆம் ஆண்டிலிருந்து இவர் சேகரித்து வைத்திருந்த நூல்களும் சுவடிகளும் கையெழுத்துப்பிரதியாக இருந்த களஞ்சியத்தின் நான்கு, ஐந்தாம் தொகுதிகளும் , அச்சு தாள்களாக இருந்த மூன்றாம் தொகுதியும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்தன. 1966ஆம் ஆண்டு முதல் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இயக்குநரான தாமரை சுப்பையா பிள்ளை அவர்கள் சாம்பசிவனாரின் சேகரிப்புகளைக் காப்பாற்ற தொடர்ந்து முயன்றார். பல்லாண்டுகளுக்குப் பின் சாம்பசிவனாரின் உடைமைகள் அறிஞர் அண்ணா சித்தமருத்துவ இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டன அச்சிட்ட தாள்களாக மடிக்கப்பெறாமல் இருந்த மூன்றாம் தொகுதியை மருத்துவர் பு.மு. வேணுகோபால் அவர்கள் அரசின் மானிய உதவியுடன் தொகுத்து வெளியிட்டார்.

நான்காம், ஐந்தாம் தொகுதிகளை வெளியிட ஜி.டி.நாயுடு அவர்கள் முயன்றார். அதற்குள் நாயுடு அவர்கள் இயற்கை எய்திவிட்டமையால் அன்னாரின் மகனார் ஜி.டி.கோபால் நாயுடு 1977ஆம் ஆண்டு நான்காம் தொகுதியையும், 1978ஆம் ஆண்டு ஐந்தாம் தொகுதியையும் தன்னுடைய ஜி.டி.நாயுடு அறநிலை மூலம் வெளியிட்டு நூலை நிறைவு செய்தார். தாமரை சுப்பையா பிள்ளையும், ஜிடி நாயுடுவும் முயலாவிட்டால் எஞ்சிய தொகுதிகள் வெளிவந்திருக்க வாய்ப்பில்லை. தமிழன்னை சூடியுள்ள மாலையிலிருந்து இந்நூலும் உதிர்ந்து, உதிர்ந்த மலர்களில் இதுவும் இடம்பெற்றிருக்கும்.

டி.வி. சாம்பசிவம் பிள்ளை எழுதிய நூலை மட்டுமின்றி சித்தமருத்துவம் தொடர்பான அனைத்து நூல்களையும் காண இங்கே சொடுக்கவும்